வேலூர் காட்பாடி அடுத்த ஜாப்ரா பேட்டையை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் யோகராஜ் (வயது 23). அதே ஊரை சேர்ந்தவர் தீபக் (23) இருவரும் ராணுவ வீரர்கள். சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் பணியாற்றி வந்தனர்.

யோகராஜ் சொந்தமாக ஜாப்ராபேட்டையில் வீடு கட்டி வருகிறார். இதற்காக அவரும் தீபக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தனர்.

இன்று யோகராஜின் பிறந்தநாள் என்பதால் அவரிடம் தீபக் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் நேதாஜி (23) மதுவிருந்து கேட்டுள்ளனர்.

நேற்று இரவு காட்பாடி கழிஞ்சூர் ரெயில்வே கேட் அருகே யோகராஜ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 3 பேரும் மது குடித்தனர். இரவு 10 மணிக்கு மேல் மது தீர்ந்து விட்டதால் மேலும் மது வாங்குவதற்காக கழிஞ்சூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்தனர். மது போதையில் இருந்த யோகராஜ் தரப்பினருக்கும் அந்த கும்பலுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கும்பல் யோகராஜ், தீபக், நேதாஜி, ஆகியோரை கத்தியால் வெட்டினர். யோகராஜிக்கு பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யோகராஜ் இறந்தார்.

தீபக், நேதாஜி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.

அவர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிஞ்சூர் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் யார்? அங்கு வந்து நேற்று இரவு மது வாங்கி குடித்தவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

இதன்மூலம் கொலையாளிகளை பிடிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ராணுவ வீரருக்கு முன்விரோதம் எதுவும் உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.