கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் வீட்டிலிருந்தபடியே செல்போன் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வருகிறார்கள். அவ்வாறு தந்தையிடம் இருந்து பாடம் படிப்பதற்காக செல்போனை வாங்கிய ஒரு மாணவிக்கு, செல்போனில் இருந்த தந்தையின் அந்தரங்க படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மாண்டியை பகுதியை சேர்ந்தவர் 48 வயது மதிக்கத்தக்க ஆணுக்கு திருமணமாகி மனைவியும், 17 மற்றும் 15 வயதில் 2 மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிகள் திறக்கப்படததால் அவர் வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்று வருகிறார்.

சம்பவத்தன்று அந்த மாணவி ஆன்லைன் வகுப்புக்காக தனது தந்தையிடம் இருந்து செல்போனை வாங்கினார். பின்னர் அதில் பாடங்கள் கற்று முடித்து விட்டு, சிறிது நேரம் செல்போனில் உள்ள போட்டோ மற்றும் வீடியோக்களை பார்த்துள்ளார். அப்போது அதில் ஒரு வீடியோவை கண்ட மாணவிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடியோவில் மாணவியின் தந்தை, அவரது உறவுக்கார பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும் காட்சிகள் இருந்தன. இதை பார்த்ததும் பதறிபோன மாணவி உடனடியாக செல்போனை எடுத்து சென்று தனது தாயிடம் அதனை காண்பித்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியான மாணவியின் தாய் சம்பவம் குறித்து கணவரிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அந்த பெண் மாண்டியா போலீஸ் நிலையத்திலும், அங்குள்ள மகளிர் அமைப்பிலும் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் கணவன், மனைவி 2 பேரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பெண், தனக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லை. அவருடன் இனி நான் வாழ மாட்டேன். எனது மகள்களை அழைத்து கொண்டு தனியாக செல்கிறேன்.

எனக்கு துரோகம் செய்த எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுங்கள் என கூறி முறையிட்டுள்ளார். அதற்கு போலீசார், உங்கள் கணவர், அவரது உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளார். இதற்காக எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது. வேண்டும் என்றால் அவர் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதற்காக வழக்குபதியலாம் என கூறினார். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து பிடிவாதமாக கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார். அவரிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கணவன், மனைவி 2 பேரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் மாண்டியா பகுதியை சேர்ந்த மகளிர் அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.