திருவான்மியூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள சாலையில் நேற்று முன் தினம் இரவு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் இருந்த இளம்பெண் ஒருவர் வாலிபருடன் இறங்கினார். இருவரிடமும் விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் மது அருந்தி இருக்கிறார்களா என்பதை கண்டறிய ஊத சொன்னார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், போலீசாரை அவதூறான வார்த்தைகளால் திட்டினார்.
‘‘நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா?’’என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய இளம்பெண், தன்னை படம் பிடித்த போலீஸ்காரர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்டார்.
மதுபோதையில் போலீசாரை எட்டி உதைத்தார். தன்னை படம் பிடித்த போலீஸ் காரரின் செல்போனை தட்டிவிட்ட போதிலும் போக்குவரத்து போலீசார் தங்களது சட்டையில் அணிந்திருந்த கேமராவின் மூலம் இளம்பெண்ணின் அனைத்து சேட்டைகளையும் பதிவு செய்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் நேற்று மாலை மின்னல் வேகத்தில் பரவியது. இதனை சமூக வலைதளங்களில் பலரும் பரப்பினார்கள். பலர் இந்த சம்பவம் எந்த இடத்தில் நடைபெற்றது என்பது தெரியாமல் இளம்பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டனர்.
நேற்று முன்தினம் போதையில் இருந்த பெண்ணிடம் சிக்கி கடும் போராட்டத்தை சந்தித்த போலீசார், அவரை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். காலையில் விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தி இருந்தனர்.
இதன்படி நேற்று காலை அந்த இளம்பெண் தன் தாயுடன் விசாரணைக்கு வந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் நடந்த சம்பவம் பற்றி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன், திருவான்மியூர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர் பெயர் காமினி என்பது தெரியவந்தது. 28 வயதான அவர், அடையாறு இந்திரா நகர் குறுக்குத்தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து வரும் இவர், தனது நண்பர் சேசு பிரசாத்துடன் வெளியில் சென்றுவிட்டு காரில் திரும்பிய போதுதான் போலீசிடம் சிக்கியுள்ளார்.
சேசு பிரசாத்தும் அதே குடியிருப்பில் வசித்து வருபவர்தான்.
இருவர் மீதும் அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதலில் ஈடுபடுதல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் வழக்குப்பதிவு செய்தார்.
பின்னர் இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காமினி மீது குடிபோதையில் இருந்ததாக போக்குவரத்து போலீசாரும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் காமினி அபராதம் செலுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
டிப்டாப் உடையில் வந்த இளம்பெண் ஒருவர் வாய் கூசும் வகையில் அறுவறுக்கத்தக்க வார்த்தைகளை பேசிய வீடியோக்களை பார்த்தவர்கள் முகம் சுளித்து வருகிறார்கள்.