ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் இன்று காலை வழக்கம்போல இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். 

இதையடுத்து, எச்சரிக்கையுடன் செயல்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினர் எந்தவித தாக்குதலும் நடத்தாமல் அந்த 2 சிறுமிகளையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அப்பாஸ்பூர் கிராமத்தை சேர்ந்த லைபா சபீர் (17), சனா சபீர் (13) என்பது தெரியவந்தது.

மேலும், அந்த இரண்டு சிறுமிகளும் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து, அந்த இரண்டு சிறுமிகளுக்கும் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த இந்திய படையினர் சிறுமிகளை பாகிஸ்தான் தரப்பிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.