அரச கூட்டுத்தாபனம் மற்றும் சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையிலுள்ள எவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது எந்தவொரு அரசியல் கட்சிக்காக செயற்படவோ, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவோ கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

அரச நிறுவனமொன்றின் தலைவர், பணிப்பாளர் சபையின் உறுப்பினர் அல்லது வேறு அதிகாரி ஏதேனுமொறு கட்சிக்காக அரசியல் செயற்பாட்டில் ஈடுபட வேண்டுமாயின், சட்டபூர்வமாக தமது பதவியிலிருந்து விலகி அதனை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் அரசாங்கம் சார்பில் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதி ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பொறுப்பிலுள்ள நிறுவனத்தை திறமையாகவும் ஊழல் இன்றியும் ஒழுக்கமாகவும் இலாபம் ஈட்டும் நிறுவனமாகவும் மேம்படுத்துவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.

அரச நிறுவனங்கள் மக்களின் பணத்தினால் நடத்திச் செல்லப்படுவதால், எந்த வகையிலும் அவை மக்களுக்கு சுமையாக அமையக்கூடாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் பொறுப்பிலுள்ள வாகனங்கள், பொருட்கள் போன்ற வளங்களையோ, நிதியையோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சி அல்லது அரசியல் செயற்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனை மீறும் அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.