கடந்த 4 தசாப்தங்களில் நிலவில் இருந்து பாறை மாதிரிகளை எடுத்து வர விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ள முதல் நாடு சீனாவாகும்.
அதிகாலை 4.30 மணிக்கு ஹைனான் தீவிலுள்ள வெஞ்சாங் விண்வெளி நிலையத்தில் இருந்து லோங் மார்ச் 5 ராக்கெட்டு மூலம் சாங்கே - 5 என்று பெயரிடப் பட்ட இந்த விண்கலம் விண்ணில் பாய்ந்தது. பில்லியன் கணக்கான டாலர்கள் செலவில் நிலவுக்கான விண்வெளித் திட்டங்களை தீட்டி வரும் சீனா 2022 ஆமாண்டு நிலவில் ஒரு விண்வெளி மையம் அமைக்கவும், மனிதர்களை அனுப்பவும் கூடத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சேகரித்து வரப்படக் கூடிய நிலவின் பாறை மாதிரிகளை ஆய்வதன் மூலம், நிலவின் பூர்வீகம், தோற்றம் மற்றும் அதன் மேற்பரப்பில் எரிமலை செயற்பாட்டின் நிலவரம் போன்ற விடயங்களை கற்றுக் கொள்ள சீன விஞ்ஞானிகள் எதிர்பார்த்துள்ளனர்.
2017 ஆமாண்டே திட்டமிடப் பட்டிருந்த இந்த செயற்திட்டம் லோங் மார்ச் 5 ராக்கெட்டு எஞ்சின் கோளாறினால் பிற்போடப் பட்டது. நிலவுக்கான இந்த செயற்திட்டம் வெற்றி பெற்றால் உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து நிலவில் இருந்து பாறை மாதிரிகளை சேகரிக்கும் 3 ஆவது நாடாக சீனா பெருமை பெறும்.
சீனாவின் சாங்கே - 5 விண்கலம் நிலவில் இதுவரை ஆராய்வு செய்யப் படாத மிக அதிகளவில் எரிமலை லாவா குளம்பைக் கொண்டுள்ள 'Oceans of Storms' என்ற பகுதியில் சென்று இறங்கி அங்கிருந்து 2 Kg பாறை மாதிரிகளைக் கொண்டு வரவுள்ளது. நவம்பர் இறுதியில் நிலவில் இறங்கி 14 புவி நாட்கள் அதாவது நிலவில் ஒரு நாள் அங்கு தங்கி மாதிரிகளை சேகரித்த பின் ஒரு கேப்சியூல் மூலம் டிசம்பர் ஆரம்பத்தில் சீனாவின் உள்ளக மொங்கோலியா பகுதியில் சாங்கே - 5 விண்கலம் வந்திறங்கவுள்ளது.
அமெரிக்கா இதுவரை ஒரு ரோபோட்டிக் முறையில் நிலவில் இருந்து மாதிரிகளை சேகரிக்கவில்லை. ரஷ்யாவோ நிலவின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளிலேயே மாதிரிகளை சேகரிக்க முடிந்தது. ஆனால் சீனாவோ உலகின் முதல் நாடாக அதி நவீன ரோபோட்டிக் முறை மூலம் நிலவில் கடினமான பகுதி ஒன்றில் முதன்முறையாக மாதிரிகளை சேகரிக்கவுள்ளது.