இந்திய வான்வெளியில் உலா வரும் அண்டை நாடுகளின் உளவுச் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளிக் கழிவுகளைச் சுயமாகக் கண்காணிக்கும் 'மொசைக்' (MOSAIC) என்ற நவீன தொழில்நுட்பத்தை 'டிகந்தரா' என்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்திய விண்வெளி தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய மாற்றமாக, அண்டை நாடுகளின் உளவு செயற்கைக்கோள்களைக் கண்காணித்து எச்சரிக்கும் அமைப்பை பெங்களூரைச் சேர்ந்த 'டிகந்தரா' என்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கி வருகிறது. 'மொசைக்' என அழைக்கப்படும் இந்த தன்னாட்சி அமைப்பு, இந்திய வான்வெளியில் உலா வரும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளிக் கழிவுகளைக் கண்டறிந்து கண்காணிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

1998-ல் பொக்ரானில் இந்தியா அணுஆயுதச் சோதனைகளை மேற்கொண்டபோது, அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள்களின் பார்வையில் படாமல் மறைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், தற்போதைய நவீன பாதுகாப்பில் பிற நாடுகளின் செயற்கைக்கோள்கள் எப்போது நம் பகுதியை நோட்டமிடுகின்றன என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. இந்தச் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 'மொசைக்' தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய விண்வெளி கண்காணிப்பு அமைப்புகளைப் போல மனிதர்களின் வழிகாட்டுதலின்றி, இந்த அமைப்பு சுயமாகவே வான்வெளியைக் கண்காணிக்கும். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் (AI & ML) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விண்மீன்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளிக் கழிவுகளை இது துல்லியமாக வேறுபடுத்தி அறியும். லடாக்கின் குளிர்ச்சியான இரவுப் பொழுதில் சோதிக்கப்பட்ட இந்த அமைப்பின் ஒரு அலகு, ஒரே இரவில் 400 முதல் 500 வரையிலான தனித்துவமான விண்வெளிப் பொருட்களைக் கண்டறியும் திறன் கொண்டது.