இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுள்ள தெருக்களில் இன்றளவும் இந்த விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பெயர் மட்டும்தானே வேறேதவிர, மற்றபடி விளையாட்டு ஒரே மாதிரிதான். 

2,500 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது என்று சொல்லப்படுவது, 'கிட்டி புல்' விளையாட்டு. மகாபாரதத்தில் பாண்டவர்களும், கவுரவர்களும் சிறுவயதில் 'கிள்ளி தண்டா' விளையாடியதாகவும், புத்தமத நூல்களிலும், கி.மு. காலத்து இலக்கியங்களிலும் இந்த விளையாட்டு 'குலிகா' என்ற பெயரிலும் குறிப்பிட்டப்பட்டிருப்பதாகவும் குறிப்புகள் உள்ளன.

அப்படி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுள்ள தெருக்களில் இன்றளவும் இந்த விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பெயர் மட்டும்தானே வேறேதவிர, மற்றபடி விளையாட்டு ஒரே மாதிரிதான். அந்தவகையில் தமிழ்நாட்டில் 'கிட்டி புல்' அல்லது 'கிட்டி புள்ளு' என அழைக்கப்படுகிறது. அதுவே பிறமாநிலங்களில் மகாராஷ்டிரா-விட்டித்தண்டு, கர்நாடகா- சின்னிதண்டு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா- கூட்டி பில்லா, பில்லாம் கோடு, கேரளா- குட்டியும் கோலும், மேற்குவங்காளம் மற்றும் அசாம்- டாங்குலி, பஞ்சாப்-அரியானா- கில்லி தண்டா, ஒடிசா- குலிபாடி, பீகார் மற்றும் உத்தரபிரதேசம்- குல்லிடான் அல்லது கில்லி தண்டா என பல பெயர்களில் விளையாடப்படுகிறது.

உலகளவில் அங்கீகாரம்

அவ்வாறு இந்தியாவில் தெருக்களில் விளையாடப்பட்ட இந்த விளையாட்டுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. மேற்கத்திய நாடுகள் சமீபகாலமாக இந்த விளையாட்டை கவனித்து அதன் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு பல பெயர்கள் இருப்பது போல வெளிநாடுகளிலும் பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்தில் பீ-வீ அல்லது டிப்-கேட் என்றும், இத்தாலியில் லிப்பா, ஸ்பெயினில் பில்ஹார்டா, போலந்தில் கிளிப்பா, மலேசியாவில் கொண்டா கொண்டி என பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில் கிட்டி புல் விளையாட்டு உலகளாவிய அங்கீகாரத்தை பெற்று சர்வதேச அளவில் ஒரு முறையான விளையாட்டாக உருவெடுத்து வருகிறது. இந்த விளையாட்டை உலகளவில் கொண்டு செல்ல கில்லி தண்டா சர்வதேச கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகள் இணைந்திருக்கின்றன.

பெருமை

நம் ஊர் தெருக்களில் விளையாடப்பட்டு, காலப்போக்கில் செல்போன்களால் மறக்கப்பட்ட இந்த "கிட்டிப் புல்", இன்று சர்வதேச விதிகளுடன், ஜெர்சி ஆடைகளுடன் ஒரு முறையான உலகளாவிய விளையாட்டாக மாறி வருவது நமக்கு பெருமையாகவே இருக்கிறது.

சமூக வலைதளங்களில் இந்த விளையாட்டு குறித்த வீடியோவுக்கு கீழே சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கு எந்த நாடு உரிமை கொண்டாட முடியும்? என்ற வாதங்களும் காரசாரமாக போய்க் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.