கேகாலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருந்த புளத்கோஹுபிட்டிய காவல்துறை பிரிவு மற்றும் கலிகமுவ பிரதேச சபை பிரிவு என்பன விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், கொவிட் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்படும் சுய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடுமையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணியின் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சமூகத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களும், அவர்களுடன் தொடர்புடையவர்கள் உட்பட, அவர்களின் பிரதேசங்கள் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும்.

அவசியம் ஏற்படின், குறித்த பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கலாம் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேநேரம், பொருளாதார மையங்களை, மொத்த விற்பனைக்காக மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மரக்கறி, பழங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுடன் மாவட்டங்களுக்கிடையில் பயணிக்கும் பாரவூர்திகளுக்கு ஊரடங்கு அனுமதி அவசியமில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.