இறை வழிப்பாட்டில் மிக முக்கியமானது, கோவிலுக்கு செல்வது. அப்படி செல்லும் போது இறைவனின் அருள் பிரசாதங்களாக எந்த கோவிலுக்கு சென்றாலும், திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவை நெற்றியில் இடுவதற்கு கொடுக்கப்படுகிறது.
எந்த கோவிலுக்கு சென்றாலும் நெற்றியில் இட்டுக் கொள்வதற்கு ஏதாவது ஒரு பிரசாதம் கொடுக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் உள்ளது.
ஆனால் இந்த காரணங்களும், அவற்றின் மகத்துவமும் தெரியாததால் பலர் அதை வீணாக தூண்களிலும், கீழேயும் கொட்டி விட்டு வந்து விடுகிறார்கள். எந்த அருள் பிரசாதத்தை எதற்காக நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
திருநீறு
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதுவழக்கம். மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது.
அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் பயன்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
சந்தனம்
சந்தனம் மூளைச்சோர்வை நீக்குகின்றது. சந்தனத்தை இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின் பகுதியில் ஞாபகங்களை பதிவு செய்து வைத்திருக்கும் மூளைப் பின்புற மேடு என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த மூளையின் முன் பகுதி சிறப்பான முறையில் செயல்படும்.
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டு விரலை நேராகப் பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்தால் மன ஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவு பெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க சந்தனம் சரியான மருந்து.
குங்குமம்
மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி, தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும்.
இதை தடுக்க நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு.
எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம்.
இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.
இவற்றின் மதிப்பு தெரியாமல் கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களை கீழே கொட்டுவது இறைவனை அவமதிப்பதாகும். இதனால் இறைவனின் அருளும் நமக்கு முழுவதுமாக கிடைக்காமல் போகும்.
அதோடு அது மற்றவர்களின் கால்களில் மிதிபடும் போது நாம் இறைவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.