தக்காளியைக் கொண்டு தயாரிக்கப்படும் தக்காளி சாஸ் சமீப காலமாக இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அனைவரது சமையலறையிலும் இருக்கும் ஒரு முக்கியமான பொருளாக தக்காளி சாஸ் அல்லது தக்காளி கெட்சப் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக தக்காளி சாஸ் உள்ளது. தக்காளி சாஸானது உணவின் சுவையை அதிகரிப்பதைத் தவிர, சமையலறையில் உள்ள பல பொருட்களை திறம்பட சுத்தம் செய்ய உதவும் என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆம், தக்காளி சாஸ் கொண்டு பல பழைய பொருட்களை புதிது போன்று ஜொலிக்க வைக்க முடியும். உங்களுக்கு தக்காளி சாஸ் கொண்டு எந்த பொருட்களையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரையை முழுமையாக படியுங்கள். ஏனெனில் கீழே தக்காளி சாஸ் கொண்டு எவற்றையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்.

காப்பர் பொருட்கள்

பெரும்பாலான இந்திய வீடுகளில் காப்பர் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அந்த பொருட்களை சுத்தம் செய்வது மிகவும் கடினம். ஆனால் வீட்டில் தக்காளி சாஸ் இருந்தால், அதைக் கொண்டு எளிதில் சுத்தம் செய்யலாம். அதற்கு அழுக்கு அதிகமாக இருக்கும் காப்பர் பொருட்களில் தக்காளி சாஸை தடவி 3-4 மணிநேரம் ஊற வைத்து, பின் எலுமிச்சை சாறு பிழியப்பட்ட வெதுவெதுப்பான நீரால் தேய்த்து கழுவி, பின் டிஷ் வாஷ் லிக்விட் பயன்படுத்தி தேய்த்து கழுவினால், காப்பர் பாத்திரங்கள் புத்தம் புதிது போல் ஜொலிக்கும்.

குழாய்கள்

உங்கள் வீட்டில் உள்ள குழாய்களானது துருப்பிடித்து இருந்தால், அந்த துருவை எளிதில் நீக்க தக்காளி சாஸ் பெரிதும் உதவி புரியும். அதற்கு தக்காளி சாஸை துருப்பிடித்த குழாய்களின் மீது தடவி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் நீரில் எலுமிச்சை சாறு, வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்நீரை ஸ்க்ரப்பரில் நனைத்து தேய்த்து கழுவ, குழாய் புதிது போன்று காட்சியளிக்கும்.

இரும்பு பாத்திரங்களில் உள்ள துருக்கள்

இரும்பு பாத்திரங்களில் சமைக்கும் உணவு சுவையாக இருப்பதோடு, அதில் சமைக்கும் உணவும் சத்துக்கள் அதிகம் நிறைந்து இருக்கும் என்பார்கள். இதனால் நிறைய பேர் இரும்பு பாத்திரங்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த இரும்பு பாத்திரங்களில் அடிக்கடி துருப்பிடித்த புள்ளிகள் உருவாகும். இந்த துருக்களைப் போக்க, அந்த பாத்திரங்களை லேசாக சூடேற்றி, அதில் தக்காளி சாஸை தடவி, 3-4 மணிநேரம் ஊற வைத்து, பின் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்த நீரைப் பயன்படுத்தி ஸ்கரப் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெள்ளி நகைகள்

உங்களின் வெள்ளி நகைகள் கருப்பாக பொலிவிழந்து காணப்படுகிறதா? அப்படியானால் அதை புதிது போன்று ஜொலிக்க வைக்க தக்காளி சாஸ் உதவி புரியும். அதற்கு வெள்ளி நகைகளில் தக்காளி சாஸை தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் டூத் பிரஷ் பயன்படுத்தி தேய்த்துக் கழுவ வேண்டும்.

பித்தளை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள்

பித்தளை பொருட்களை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான வேலையாகும். ஆனால் இந்த பொருட்களை வீட்டில் தக்காளி சாஸ் இருந்தால், எளிதில் புதிது போன்று மாற்றலாம். அதற்கு பித்தளை பொருட்களில் தக்காளி சாஸை தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் ஸ்க்ரப்பரை உப்பில் நனைத்து அந்த பொருட்களை தேய்த்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வேண்டுமானால் உங்கள் வீட்டில் உள்ள பித்தளை பொருளில் இதை ட்ரை பண்ணி பாருங்க...