நடிகர் ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன்பு லம்போர்கினி காரை ஓட்டிச் செல்லும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த காரில் நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சென்று அங்குள்ள தனது மகள் சௌந்தர்யா மற்றும் மருமகனை சந்தித்த புகைப்படமும் வெளியாகி வைரலானது. இதனிடையே செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் வரும் கேளம்பாக்கத்திற்கு செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்ற சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து தெரிவித்த அதிகாரிகளும் ரஜினிகாந்த் இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்திருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 26ம் தேதி சென்னையிலிருந்து, செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு காரில் சென்றார். அப்போது, சீட் பெல்ட் அணியாமல் அவர் சென்றுள்ளார். சென்னை -செங்கல்பட்டு மாவட்ட எல்லையான செம்மஞ்சேரியில், சோதனையில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்ட போலீசார், சீட்பெல்ட் அணியாமல் சென்றது குறித்து ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், போக்குவரத்து விதிமுறையை மீறி சென்றதற்காக ரஜினிகாந்திற்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த அபராதத் தொகையை, நடிகர் ரஜினி நேற்று செலுத்தி உள்ளார்.