வடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உலகளவில் 1 கோடியே 60 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வந்தநிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து ஜனாதிபதி கிம் ஜாங் உன் உயரதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதனையடுத்து, நாடு தழுவிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாகவும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கேஸாங் நகரில் முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்ட நபர் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் இது ஒரு ஆபத்தான சூழ்நிலை, இது பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று அந்நாட்டுசெய்தி ஊடகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியாவில் தற்போது ஒரு நாளைக்கு 40 முதல் 60 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.