பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாத சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வௌியேறும் நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் இலக்கங்களை அடிப்படையாக கொண்டு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நாளை (13) முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும்.

இதன் காரணமாக தொழிலுக்காக அல்லது வேறு அத்தியாவசிய தேவைக்காக வீட்டில் இருந்து வௌியேறும் போது அனைத்து பொதுமக்களும் அடையாள அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

´உதாரணமாக இன்று மே மாதம் 12 ஆம் திகதி. இன்றைய தினத்தில் அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 2,4,6 அல்லது 8 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரமே வீட்டில் இருந்து வௌியேற முடியும். நாளை 13 ஆம் திகதி அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள்1,3,5,7 அல்லது 9 ஆக இருக்கும் நபர்களுக்கு மாத்திரம் பயணிக்க முடியும். 0 இருக்கும் போது அது இரட்டை எண்ணாக கருதப்படும். அதன்படி, இரட்டை எண்ணுக்கு உரிய தினத்தில் பயணிக்க முடியும்´ என்றார்.