முன்னதாக டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்தியதாக ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டிருந்த போது 2019ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கனே வில்லியம்சன் கேப்டனாக செயல்பட்டார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் புள்ளிகள் பட்டியலில் 3வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த சீசனில் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியாமல் தத்தளித்து வருகிறது. இதுவரை 6 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலிலும் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..
இதனையடுத்து அணி நிர்வாகம் அதிரடியாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேப்டன் டேவிட் வார்னரிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்துள்ளது. அவருக்கு பதிலாக நியூசிலாந்தைச் சேர்ந்த கனே வில்லியம்சனை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. கனே வில்லியம்சன் நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில் எஞ்சிய போட்டிகளுக்கு கனே வில்லியம்சனே கேப்டனாக செயல்படுவார் என்றும் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை (மே 2) டெல்லியில், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கனே வில்லியம்சன் கேப்டனாக களமிறங்குவார். அதே போல நாளைய போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்யப்படும் என அந்த அணி நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட காலமாக எங்கள் அணியினை தலைமையேற்று வழிநடத்திய டேவிட் வார்னரை நாங்கள் பெருமளவில் மதிக்கிறோம். எஞ்சிய போட்டிகளில் அவர் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அணிக்கு தனது பங்களிப்பை தருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்தியதாக ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டிருந்த போது 2019ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கனே வில்லியம்சன் கேப்டனாக செயல்பட்டார். அப்போது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று 4வது இடத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிடித்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016ல் ஒரே ஒரு முறை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது கேப்டனாக செயல்பட்டவர் டேவிட் வார்னர் தான். ஆனால் அவர் இந்த சீசனில் பேட்டிங்கில் தடுமாறி வருவது கண்கூடாக தெரிகிறது. இரு முறை அரை சதம் அடித்திருந்தாலும் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மந்தமாக பேட்டிங் செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இனி எஞ்சிய அனைத்து போட்டிகளிலுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் மட்டும் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.