திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் இசக்கிராஜா. பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி செல்வி(வயது 24). இவர்களுக்கு ரித்தீஷ் என்ற 1½ வயது ஆண் குழந்தை இருந்தது.
இந்தநிலையில் கணவன் மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்றும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காலையில் இசக்கிராஜா வேலைக்கு சென்று விட்டார். செல்வியும், அவரது குழந்தையும் வீட்டில் இருந்தனர்.
இந்தநிலையில் பால்காரர் ஒருவர் பால் ஊற்ற இசக்கி ராஜா வீட்டிற்கு வந்த போது, வீட்டில் வாயில் நுரைதள்ளி மயங்கிய நிலையில் தாயும், மகனும் கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பால்காரர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் விரைந்து சென்று செல்வியையும், அவரது குழந்தையையும் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை ரித்திசை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ரித்திஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் செல்வி தனது குழந்தைக்கு விஷத்தை கொடுத்து விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் குழந்தை இறந்து விட்டது. செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.