யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், யாழில் 7ஆவது நபர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடம் ஆகியவற்றில் 470 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் 6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். மாநகர பருத்தித்துறை வீதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமை தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனையின் போதே அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் 7ஆவது நபர் கொவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பொதுச் சந்தையில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நாவற்குழியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சந்தைக்கு வருகை தந்த நிலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.