திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருச்சி குமாரவயலூர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 22). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் திருச்சியை சேர்ந்த பிளஸ்-2 படித்து வந்த ஒரு சிறுமியிடம் (வயது 16) பழகி வந்தார். பின்னர் அவர், திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை அவரிடம் உல்லாசமாக இருந்து வந்தார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் அந்த வாலிபரிடம் கேட்டனர். அப்போது அவர் தனக்கு இது பற்றி தெரியாது என்றும், சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஜீயபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் இது தொடர்பான வழக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் அருள்செல்வி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் நீதிபதி வனிதா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.