தவளக்குப்பம் அருகே கடன் கொடுத்தவர்களும் பணத்தை திருப்பிக் கேட்டு தொல்லை கொடுத்ததால் பழக்கடைக்காரர் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் சாலையை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 65). பழக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி தேவகி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்களின் திருமண செலவிற்காக சிலரிடம் கலியமூர்த்தி கடன் வாங்கினார். பழக்கடையில் சரியான வியாபாரம் இல்லாததால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவர் சிரமப்பட்டு வந்தார். கடன் கொடுத்தவர்களும் பணத்தை திருப்பிக் கேட்டு தொல்லை கொடுத்தனர். இதனால் தேவகி மனவேதனையில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவர் தூங்கிய பிறகு தேவகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை கலியமூர்த்தி எழுந்து பார்த்தபோது மனைவி பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் தவளக்குப்பம் போலீசார் அங்கு சென்று தேவகியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.