தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

 


தஞ்சை அடுத்த அம்மாபேட்டை அரசு உதவிபெறும் மகளிர் பள்ளியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 57 மாணவிகள், 1 ஆசிரியை, மாணவிகளின் பெற்றோர் 11 பேர் என 69 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள்.

அதனை தொடர்ந்து தஞ்சை, பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம் பகுதிகளில் 11 பள்ளிகள், வல்லத்தில் உள்ள ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம், திருவையாறு, கும்பகோணத்தில் உள்ள 2 கல்லூரிகளில் நேற்று வரை மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 168 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மகளிர் பள்ளியில் 10 மாணவிகள், தஞ்சை மாரியம்மன் கோவிலில் உள்ள அரசு பள்ளியில் 2 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேப்போல் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஏற்கனவே 4 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதிதாக 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் 17 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 185-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பலரின் முடிவுகள் வர வேண்டி உள்ளதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.