அமெரிக்காவில் 5 கொலை வழக்கு தொடர்பில் நாடு முழுவதும் தேடப்பட்டு, இறுதியில் கைது செய்யப்பட்ட நபர், தாம் 16 கொலை செய்துள்ளதாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நியூ ஜெர்சி பகுதியை சேர்ந்த 47 வயதான சீன் மைக்கேல் லானன் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இவரது முன்னாள் மனைவி உள்ளிட்ட ஐவரை கொலை செய்த வழக்கில் தலைமறைவான லானன், நாடு முழுவதும் தேடப்பட்டு பின்னர் கைதானார்.

ஆனால், தாம் இதுவரை 16 கொலைகள் செய்துள்ளதாக லானன் முதற்கட்ட விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மார்ச் 8ம் திகதி நியூ ஜெர்சி பகுதியில் சுத்தியலால் கொடூரமாக கொல்லப்பட்ட 66 வயது நபர் உட்பட பலரை கொன்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது சிறு வயதில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாலையே, அந்த 66 வயது நபரை தற்போது கொன்றுள்ளதாக லானன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, தமக்கு பணிய மறுத்த லானனை அந்த நபர் சுத்தியலால் மிரட்டிய காரணத்தாலையே, அவரை சுத்தியலால் அடித்து கொன்றதாகவும் லானன் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையின்போது, நியூ மெக்ஸிகோவில் 15 பேரையும், நியூஜெர்சியில் ஒருவரையும் கொன்றதாக லானன் கூறியுள்ளார்.

16 பேரைக் கொன்றது குறித்து லானனின் கூற்றுகளின் உண்மைத்தன்மையை சட்டத்தரணிகளால் இதுவரை உறுதி செய்ய முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

லானன் தற்போது சேலம் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டு வீடியோ அழைப்பு மூலம் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்கிறார்.