இந்த வழக்கில் அறிவியல் ரீதியிலான தடயவியல் ஆதாரங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும். அந்த நபரை வெளியில் விடுவது சமுதாயத்துக்கு மிகப்பெரிய ஆபத்து.

ஆந்திராவில் இரண்டு சிறுவர்களை பாலியல் ரீதியிலாக துன்புறுத்தி படுகொலை செய்த 19 வயது இளைஞனை குண்டூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதி தடேப்பள்ளி. மார்ச் 14-ம் தேதி 6வயது சிறுவனை காணவில்லை என தடேப்பள்ளி காவல்நிலையத்துக்கு ஒரு புகார் வருகிறது. மதியம் 3-4 மணியளவில் சிறுவனை காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 11-ம் தேதி இதேபோல் சிறுவனை காணவில்லை என தடேப்பள்ளி காவல்நிலையத்துக்கு புகார் வந்துள்ளது. அந்த வழக்கில் எந்த தடயமும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. சிறுவன் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. ஒரு மாத காலத்துக்குள் அதே வயதுடைய சிறுவனை காணவில்லை என புகார் வந்ததும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இரண்டு நாள் கழித்து அந்தப்பகுதியில் உள்ள தோப்பில் கை, கால்கள் உடைந்த நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்தது. சிறுவனை அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

அந்த ஊரைச் சேர்ந்த கோபி என்ற இளைஞன் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வழுத்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதில் செயின் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய குண்டூர் காவல்துறை அதிகாரிகள், “ சிறுவனை கடத்தி சென்றதை கோபி ஒத்துக்கொண்டார். சிறுவனை கடத்தி சென்று பாலியல் ரீதியிலாக துன்புறுத்தியுள்ளார். சிறுவன் கூச்சலிட்டதில் ஆத்திரமடைந்து கடுமையான தாக்கி கொலை செய்துள்ளான். சிறுவனின் சடலத்துடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறினான். அதுமட்டுமின்றி கடந்தமாதம் 8 வயது சிறுவனை இதேபோல் கொலை செய்து பக்கிங்ஹாம் கால்வாயில் வீசியதாக கூறினான்.

அவன் எங்களுடன் சிறுவனை தேடுவதுபோல் பயணித்தான். கோபியின் உளவியல் மிகவும் மோசமாக உள்ளது. சைக்கோ போன்று உள்ளான். இந்த வழக்கில் அறிவியல் ரீதியிலான தடயவியல் ஆதாரங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும். அந்த நபரை வெளியில் விடுவது சமுதாயத்துக்கு மிகப்பெரிய ஆபத்து. 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அவன் சிறையில் இருப்பதை உறுதி செய்வோம்” என்றனர்