கோவை தொண்டாமுத்தூர் அடுத்துள்ளது குளத்துப்பாளையம். இங்குள்ள சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 70). ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியர். இவரது மனைவி சரோஜினி (65). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

 


இந்நிலையில் சமீபத்தில் இவரது மகன் விபத்தில் இறந்து விட்டார். ஓய்வுபெற்ற பின்னர் ராமமூர்த்தி அருகில் உள்ள வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்தார். அப்போது தீப்பொறி கண்ணில் பட்டு காயம் அடைந்தார். அதன்பின்னர் கண் பார்வை மங்கியது. இது தவிர அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவரை அவரது மனைவி சரோஜினி கவனித்து வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை ராமமூர்த்திக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த சரோஜினி அவருக்கு முதல் உதவி செய்தார். இது குறித்து அருகில் உள்ள டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர் வீட்டிற்கு வந்து ராமமூர்த்தியை சோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

ராமமூர்த்தி இறந்தது குறித்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு சென்றார். கணவர் இறந்த தகவலை கேட்ட சரோஜினி பித்து பிடித்தது போல் அங்குமிங்கும் ஓடினார். சிறிது நேரத்தில் மயங்கினார். மேலும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சரோஜினியையும் டாக்டர் மூலம் பரிசோதனை செய்தனர். அவரும் இறந்துவிட்டதாக டாக்டர் கூறினார். அடுத்தடுத்த இறப்பு செய்தி குடும்பத்தினரை அதிர்ச்சியில் நிலைகுலைய செய்தது. சாவிலும் இணைபிரியாத தம்பதியின் இறப்பு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தம்பதி குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, ராமமூர்த்தியும், சரோஜினியும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். இளமை காலத்தில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு மக்களுக்காக போராடினர். போராட்ட களத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே காதல் திருமணம் செய்தனர். காதல் தம்பதி எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர். நல்ல நண்பர்களை போன்று மகிழ்ச்சியாக இருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமமூர்த்திக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது இரவும், பகலுமாக அருகில் இருந்து கவனித்து வந்தார். ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று மருந்து, மாத்திரைகளை உரிய நேரத்திற்கு கொடுத்து பாதுகாத்து வந்தார்.

முதுமை அவர்களை தழுவியபோதும் காதல் உறுதியாகவே இருந்தது. இன்று அதிகாலை ராமமூர்த்தி இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவி இறந்து விட்டார். காதல் திருமணம் செய்த தம்பதி சாவிலும் இணைபிரியாமல் இறந்தது இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது என்று கூறினர்.