மலையக மக்களை, தான் இருக்கும்வரை எவரும் சீண்ட முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கடந்த நான்கரை வருடங்களில் மக்களை எவரும் சீண்டவில்லை எனவும் சேவைகளைச் செய்துகாட்டிவிட்டே அவர்களிடம் வாக்குக் கேட்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொத்மலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நான் அமைச்சரான பின்னர் நான்கரை வருடங்களில் எவ்வாறான சேவைகளை முன்னெடுத்துள்ளேன் என்பது மக்களுக்குத் தெரியும். மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் சேவைகள் செய்துள்ளோம்.

ஆனால், தேர்தல் காலத்தில் கண்டியில் இருந்து பரசூட் அரசியல்வாதிகள் இங்குவந்துள்ளனர். மக்கள் மத்தியில் பொய்யுரைத்து வாக்குகளைப் பிரிப்பதற்கு முயற்சிக்கின்றனர். நாம் இங்கேதான் பிறந்தோம். இந்த மண்ணில்தான் வாழ்கின்றோம். வென்றாலும் தோற்றாலும் இங்கிருந்து வெளியில் செல்லமாட்டோம்.

இதேவேளை, ஓகஸ்ற் 5ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் வீடமைப்புத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். வேலைகளை செய்துவிட்டுத்தான் நாம் வாக்குக் கேட்கின்றோம். மக்களாகிய நீங்கள் யாருக்கும் பயப்படவேண்டாம். நான் இருக்கின்றேன்.

எமது மக்களுக்கு 50 ரூபாயை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சித்தேன். துரோகி நவீன் அதற்கு இடமளிக்கவில்லை. எமது மக்கள் உணர்வுபூர்வமானவர்கள். விலைபோகமாட்டார்கள். போலி வேட்பாளர்களை நம்பவேண்டாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.