ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் வெற்றிச்செல்வம் (வயது31). அதே பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்து வருகிறார்.

 


இவருக்கும், மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த குணசேகரன் மகள் சரண்யா (27) என்பவருக்கும் 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் சரண்யா அவரை பிரிந்து குழந்தைகளுடன் மதுரையில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். குடும்ப சூழ்நிலையை கருதி சரண்யா மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்தார்.

இந்த நிலையில் நேற்று மது குடித்த வெற்றிச்செல்வன் சரண்யாவை போனில் தொடர்பு கொண்டு உன்னை பார்க்க வேண்டும். ஆசையாக உள்ளது. பரமக்குடிக்கு வா என்று கூறி உள்ளார்.

இதையடுத்து கணவரின் அழைப்பை ஏற்று சரண்யா நேற்று பரமக்குடிக்கு சென்றார். வீட்டில் 2 பேரும் தனிமையில் இருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

போதையில் இருந்த வெற்றிச்செல்வம் மதுரையில் உனக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு உள்ளது என கூறி உள்ளார். இதை சரண்யா மறுக்கவே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த வெற்றிச்செல்வம் திடீரென்று வீட்டின் வெளியே கிடந்த பாறாங்கல்லை எடுத்து சரண்யாவின் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதனை தொடர்ந்து வெற்றிச்செல்வம் பரமக்குடி நகர் போலீசில் சரண் அடைந்தார்.

இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை வீட்டிற்கு வரவழைத்து கணவர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.