மியான்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வரும் நிலையில் யங்கூனில் பல்லாயிரக் கணக்கில் ஒன்று கூடிய பொது மக்கள் கலைந்து செல்ல போலிசார் ரப்பர் தோட்டாக்களை பிரயோகித்துள்ளனர்.
மேலும் இதன் போது இன்னொரு பெண் கொல்லப் பட்டுள்ளார்.
ஆனால் அவர் மீது உண்மையான துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததா என்பது தொடர்பில் தெளிவான தகவல் வெளியாகவில்லை. மியான்மார் இராணுவத்தின் மீது சர்வதேசத்தின் அழுத்தமும், ஐ.நாவின் அழுத்தமும் அதிகரித்துள்ளன. மியான்மாரில் ஜனநாயகம் மீண்டும் நிலை நாட்டப் பட வேண்டும் என ஐ.நாவுக்கான மியான்மார் தூதுவர் குயாவ் மோ தூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெப்ரவரி முதலாம் திகதி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட மியான்மார் சிவிலியன் தலைவி ஆங் சான் சூகி இனைக் கைது செய்திருந்த மியான்மார் இராணுவம் தலைநகர் நேப்பிடாவில் இருந்து அவரை வெளியேற்றி ஒரு மர்ம இடத்தில் வீட்டுக் காவலில் வைத்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை நூற்றுக் கணக்கான மியான்மார் மக்கள் தமது மொன் தேசிய தினத்தைக் கொண்டாட யங்கூன் போன்ற நகரங்களில் ஒன்று கூடினர். ஆனால் இவர்களையும் கலைந்து செல்லுமாறு போலிசார் வற்புறுத்தினர். மேலும் 3 பத்திரிகையாளர்கள் அடங்கலாக சிலரைக் கைதும் செய்தனர்.
ஆனால் மியான்மாரில் ஜனநாயகம் நிலைநாட்டப் பட்டு தமது தலைவர்கள் விடுவிக்கப் படும் வரை எமது போராட்டம் உறுதியாகத் தொடரும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களில் ஒருவரான 23 வயதாகும் மொயே மொயே என்பவர் தெரிவித்துள்ளார்.