தமிழகத்தில் திருமணத்தை மறைத்து இளைஞனை பெண் காதலித்த நிலையில் உண்மையை அறிந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக இது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அம்ரின் (25) - அஜீஸ் தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். யோயோ எனப்படும் செயலி மூலம் அம்ரினுக்கு சென்னை தாம்பரம் சேலையூரைச் சேர்ந்த பூபதி (21) என்ற இளைஞன் நட்பில் கிடைத்துள்ளார்.
தன்னைவிட 4 வயது சிறியவரான பூபதியிடம் தன்னை கல்லூரி மாணவி என அறிமுகம் செய்துகொண்டு சாட் செய்து வந்துள்ளார் அம்ரின். அம்ரினிடம் காதலில் விழுந்த பூபதி, கடந்த 20 ஆம் திகதி பெற்றோரிடம் சேலம் செல்வதாகக் கூறிவிட்டு அம்ரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போதுதான் அம்ரினுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. பூபதியை சமாதானம் செய்த அம்ரின், கணவர் வியாபாரத்திற்காக வெளியே சென்றுள்ளார் என்றும் அவர் வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறி காதலன் பூபதியை தனது வீட்டிலேயே தங்கவைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை மாலை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கூறி காதலன் பூபதியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார் அம்ரின்.
திரும்பி வந்து பார்த்த போது மின்விசிறியில் பூபதி தூக்கில் தொங்கியிருந்ததாகக் கூறுகிறார் அம்ரின். அம்ரின் கொடுத்த தகவலின்படி வீட்டிற்கு வந்த பொலிசார் பூபதியின் உடலை கைப்பற்றினர்.
அவரிடமிருந்து ஒரு தாலியையும் செல்போனையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். காதலிக்குத் திருமணம் ஆகி இருக்கும் எனத் தெரியாமல் திருமணம் செய்யும் முடிவோடு அவர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பூபதியின் தந்தை பொலிசில் புகாரளித்துள்ளார்.
இதையடுத்து அம்ரின் வீட்டில் இளைஞர் பூபதி கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.