திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா பச்சூர் சாமகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம், விவசாயி. இவர், டிராக்டர் மூலம் கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகளும், மகனும் உண்டு. 

நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் வேலாயுதம் தனது தண்ணீர் டிராக்டரை பின்நோக்கி நகர்த்தி உள்ளார். அப்போது பின்னால் நின்றிருந்த மகள் தேர்மிகா (வயது 2) பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த வேலாயுதமும், குடும்பத்தினரும் கதறி அழுதனர். நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.