நெல்லையில் உள்ள தச்சநல்லூர், சத்திரம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது 50). இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.

ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற கண்ணபிரான், நேற்று தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக தனது ஆதரவாளர்களுடன் வீட்டில் இருந்து நடந்து தச்சநல்லூர் போலீஸ் நிலையம் சென்றார்.

போலீஸ் நிலையத்திற்குள் கண்ணபிரான் நுழையவும், போலீஸ் நிலைய வாசலில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் 3 வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது.

அதிர்ஷ்டவசமாக கண்ணபிரான் போலீஸ் நிலைய கட்டிடத்துக்குள் சென்று விட்டதால் அவருக்கு எந்த காயமும் இல்லை. வாசலில் நின்ற அவரது ஆதரவாளரான அம்பையைச் சேர்ந்த கிங்ஸ்டன் (27) என்ற வாலிபருக்கு மட்டும் காலில் லேசான காயம் ஏற்பட்டது.

வெடிகுண்டு வெடித்ததில், அந்த பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டு இருந்தது. மற்றபடி வேறுயாருக்கும் எந்தவித பெரிய காயமும் ஏற்படவில்லை. வெடிகுண்டு வீசியவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்துக்கு மாநகர துணைபோலீஸ் கமி‌ஷனர் சரவணன், உதவி கமி‌ஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். அப்போது அது சக்தி குறைந்த சாதாரண நாட்டு வெடிகுண்டு என்று தெரியவந்தது. வெடிக்காமல் கிடந்த ஒரு வெடிகுண்டையும் போலீசார் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும், அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளையும் பெற்று போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

கண்ணபிரான் வீட்டில் இருந்து புறப்பட்டு நடந்து வந்த போது, 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கும்பல் போலீஸ் நிலையம் முன்பு 3 முறை சுற்றி சுற்றி வந்துள்ளது பதிவாகி உள்ளது.

மேலும் அந்த கும்பல் கண்ணபிரான் போலீஸ் நிலையத்தில் நுழைந்த போது அங்கு வந்து வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பிச் செல்வதும் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணபிரான், தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்களை பிடிக்க உதவி கமி‌ஷனர் சதீஷ் குமார் மேற் பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் காசிப்பாண்டியன், சாமி, மகேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

மர்ம கும்பல் வந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்கள் சரியாக தெரியா விட்டாலும், அதில் வந்தவர்களின் அங்க அடையாளங்களையும், பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களையும் வைத்து தீவிரமாக தேடும் பணிகள் நடந்து வருகிறது.