நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). மந்திரவாதி. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்துவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.


இதனை உண்மை என நம்பி கடலூர் அருகே உள்ள சேத்தியாத்தோப்பை சேர்ந்த பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது 7 வயது மகளை குணப்படுத்துவதற்காக சக்திவேலை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சக்திவேல் உங்களது மகளை குணப்படுத்த வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் பூஜைகள் மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

இதை நம்பிய அந்த பெண் தனது வீட்டின் முகவரியை தெரிவித்தார். உடனே சக்திவேல் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். மனநலம் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியின் தாயிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட முயன்றார்.

இதுகுறித்து ஒரத்தூர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மந்திரவாதி சக்திவேலை கைது செய்தனர்.