அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கியிருக்கிறார்.
இந்தநிலையில், அமெரிக்காவின் கின்னிபியாக் பல்கலைக்கழகம் கடந்த 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை தேசிய அளவில் நடத்திய கருத்து கணிப்பொன்றை நடத்தியது. இதன் முடிவுகள் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டன.
இதில், தற்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு, ட்ரம்புக்கு ஆதரவாக 41 சதவீதம் பேரும் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக 49 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.
இதேவேளை, வேலை இழப்பு பொருளாதார சரிவு உள்ளிட்ட விவகாரங்களில் ட்ரம்பின் தலைமைக்கு எதிராக 55 சதவீதம் பேர் வாக்களித்தனர்.