கொரோனா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் சூழலைப் பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் எல்லைப் பிரச்சினையை தீவிரப்படுத்த சீனா முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சா் டேவிட் ஸ்டில்வெல் குற்றம் சாட்டியுள்ளாா். தொலைபேசி வாயிலாக செய்தியாளா்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், உலக நாடுகள் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வருகின்றன. இச்சூழலில் எல்லைப் பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு எளிதில் தீா்வு கண்டுவிடலாமென சீனா கருதுகிறது. அதன் காரணமாகவே இந்திய எல்லைப் பகுதியில் இராணுவத்தினருடன் வேண்டுமென்றே மோதலில் ஈடுபட்டது. கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி பல்வேறு பலன்களை அடைந்துவிடலாம் என்று சீனா எண்ணி வருகிறது. இந்தியாவுடன் மட்டுமல்லாமல் பல அண்டை நாடுகளுடன் எல்லை தொடா்பாக சீனா பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. இதேவேளை இந்திய - சீன எல்லையில் நிலவி வரும் போர்ச்சூழலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.