அமெரிக்காவில், தனது 21 மாத குழந்தையுடன் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் ஒரு பெண். திங்கட்கிழமை இரவு, பெண் ஒருவர் பெட்ரோல் நிலையம் ஒன்றின் மீது காரை மோத முயற்சி செய்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்குள், அந்த பெண் காரிலிருந்தி இறங்கி மேம்பாலம் ஒன்றை நோக்கி நடக்கத்தொடங்கியிருக்கிறார்.

    

 

பொலிசாருக்கு வந்த இரண்டாவது அழைப்பில், காரிலிருந்து இறங்கிய அந்த பெண், கையில் குழந்தை ஒன்றுடன் பாலத்தை நோக்கி நடந்து சென்றதாகவும், அதற்குப் பின் அவரைக் காணவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.

சில நிமிடங்களுக்குப் பின் மூன்றாவதாக பொலிசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்துள்ளது. அதில், தான் சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, பாலத்திலிருந்து ஏதோ ஒரு பொருள் தன் ட்ரக்கின்மீது வந்து விழுந்ததாக ட்ரக் ஒன்றின் சாரதி தெரிவித்துள்ளார்.

பொலிசார் வந்து பார்க்கும்போது, ட்ரக் மீது விழுந்தது பொருள் அல்ல, அது ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் என்பதையும், தங்களுக்கு தொடர்ச்சியாக வந்த அந்த மூன்று அழைப்புகளுமே, அந்த ஒரே பெண் தொடர்பானவைதான் என்பதையும் அறிந்துகொண்டுள்ளார்கள்.

அந்த பெண்ணின் பெயர் Tonisha Barker (26), அவரது 21 மாத குழந்தையின் பெயர் Jonathan Jones என்பது தெரியவந்துள்ளது.

Memphis என்ற இடத்தைச் சேர்ந்த Tonisha தன் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவரவில்லை என்றாலும், கொரோனா களப்பணியாளராக பணியாற்றிவந்த அவர் கடும் மன அழுத்தத்திலிருந்ததாக அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.

பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.