உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆப்ரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது. ஆனால், பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டபோதும் 2020 மார்ச் மாதத்தில் தான் வைரஸ் ஆப்ரிக்க நாடுகளுக்கு பரவத்தொடங்கியது. குறிப்பாக, ஆப்ரிக்க நாடான கென்யாவில் மார்ச் மாதத்திற்கு பின்னகே கொரோனா பரவத்தொடங்கியது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டில் 2020 மார்ச் மாதம் முதலே பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. அந்நாட்டில் இதுவரை மொத்தமாக 97 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 1,600 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கென்யாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் கட்டுக்குள் வந்ததையடுத்து அந்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, 9 மாதங்களுக்கு பிறகு நேற்று கென்யாவில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வரும் மாணவ\மாணவிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடைமுறையாக வகுப்புகளில் போதிய இடவசதி இல்லையென்றால் பள்ளி கட்டிடத்திற்கு உள்ளே மரத்தடி நிழலில் வைத்து வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவ\மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்தனர்.