அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 645 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,967 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்து 699 ஆக அதிகரித்தது. இதில் நேற்று மட்டும் 1,866 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 321 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 3 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 685 ஆக அதிகரித்தது. தற்போது 22 ஆயிரத்து 693 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தொடர்ந்து முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.