ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
இதன் படப்பிடிப்பு மதுரை, டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவுற்றது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 31) 'அத்ரங்கி ரே' இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனது ட்விட்டர் பதிவில்,
"எனக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, நலமாகவே இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பினேன். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி தனிமையில் இருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு, அரசாங்கத்தின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆதரவுக்கு நன்றி." என்று பதிவு செய்திருக்கிறார்.
இவ்வாறு ஆனந்த் எல்.ராய் தெரிவித்துள்ளார்.