பொதுத்தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான சூழ்நிலையை உருவாக்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் நாளையதினம் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த கலந்துரையாடலில் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் மற்றும் அதன் செயலாளர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளைய தினம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும், தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, வாக்குசீட்டுக்களில் வாக்களிப்பதற்கான நேரங்களைப் பதிவிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடிகளில், ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் வகையிலேயே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்