இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்தன. விமான போக்குவரத்து ரத்து செய்யப்படுவதற்கு முன்னதாக பலரும் அந்நாட்டில் இருந்து பயணம் மேற்கொண்டதால் பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா பரவத்தொடங்கியுள்ளது.

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்ற தகவலை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. இங்கிலாந்தில் இருந்து வந்த பலருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள போதும் அது உருமாறிய கொரோனாவா? என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பரவியது உருமாறிய கொரோனா வைரசா? என்பது குறித்த பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

* இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

* வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உருமாறிய கொரோனா பரவியுள்ளதா? என்பதை மத்திய அரசுதான் அறிவிக்கும்.

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது

* இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை. என்றார்.