புதுவகை கொரோனா பரவல் காரணமாக பிரித்தானியாவிலிருந்தும், பிரித்தானியாவுக்கும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான லொறி சாரதிகள் பண்டிகை நேரத்தில் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Kentஇலுள்ள Manston விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான லொறிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் நேரத்தில் வீடு திரும்ப வழியின்றி சாலைகளில் தவித்து நிற்கும் லொறி சாரதிகளுக்கு சீக்கியர்களின் தொண்டு நிறுவனம் ஒன்று இலவசமாக உணவு வழங்கியது.

அந்த தொண்டு நிறுவனத்தினர் 500 மூக்குக்கடலைக் கறி, 300 காளான் மற்றும் பாஸ்தாவுடனான உணவுப்பொட்டலங்களை தயாரித்து பசியுடனிருக்கும் அந்த லொறி சாரதிகளுக்கு வழங்கினர்.

அவர்கள் அத்தனை பேருக்கும் மூன்றே மணி நேரத்தில் அந்த உணவை தயாரித்து சுடச்சுட வழங்கினர்.

இதற்கு முன் Kent பகுதி கவுன்சில், அந்த சாரதிகளுக்கு சாக்லேட் பார்கள் வழங்கியதுடன், கழிவறை வசதிகளும் செய்துகொடுத்தது.

மேலும், Ramsgate FC என்ற கால்பந்து அணி சார்பில் லொறி சாரதிகளுக்கு பீட்சாவும் வழங்கப்பட்டது. என்றாலும், தங்களை எப்படியாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் வீடு திரும்ப அனுமதிக்குமாறு கோரியுள்ளார்கள் அந்த சாரதிகள்.