பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை நடுரோட்டில் வைத்து வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹூப்ளி நகரில் தேஷ்பாண்டி என்ற பகுதியில் சாலையில் நடந்து சென்ற ஆஷா என்ற பெண்ணை இஸ்மாயில் என்பவர் வழிமறித்து கத்தியால் தாக்கினார். ஆஷா கூச்சலிட்டு காப்பாற்றுமாறு கெஞ்சும் காட்சி அருகிலிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. தாக்குதலில் படுகாயமடைந்த ஆஷாவை பொதுமக்கள் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருந்த ஆஷா பிழைத்துக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய போலீசார், இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்ததை கண்டுபிடித்தனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இஸ்மாயில் உடன் பேசுவதை ஆஷா நிறுத்திக் கொண்டார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் ஆஷாவை இஸ்மாயில் கத்தியால் குத்தி தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தாக்குதல் தொடர்பாக இஸ்மாயிலை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் இளம்பெண் ஒருவரை இளைஞர் சரமாரி வெட்டும் சிசிடிவி பதிவானது வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் காதலிக்க மறுத்த குற்றத்திற்காக இளம்பெண் ஒருவர் சரமாரி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்க மறுத்த இளம்பெண்ணை நடுரோட்டில் வெட்டிய கொடூர இளைஞர் கைது!: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
