நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 594 கொரோனா நோயாளர்களுள் பெருமளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 253 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொவிட் -19 இரண்டாவது அலையின் பின்னர் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 109 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம், 124 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 62 பேர் கண்டி மாவட்டத்திலும் 49 பேர் களுத்துறை மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 16 பேரும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 14 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 13 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 12 பேரும் பதிவாகினர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் 8 பேரும் கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா 7 பேரும் காலி மாவட்டத்தில் 6 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 3 பேரும் அனுராதபுரம் மாவட்டத்தில் 2 பேரும் மொனராகலை மாவட்டத்தில் ஒருவரும் கண்டறியப்பட்டனர்.

இதேநேரம் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த இரண்டு பேருக்கும் தொற்று உறுதியானதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 261 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் 28 ஆயிரத்து 267 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து தொற்றுக்கு உள்ளான 8 ஆயிரத்து 818 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.