கிராமப்புற மக்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடி அவற்றை அதிகாரிகளிடம் முன்வைத்து விரைவான தீர்வுகளை வழங்குவது ஜனாதிபதியின் நோக்கமாகும். நாட்டின் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை சரியாக அடையாளம் காண்பது இதன் மற்றொரு நோக்கமாகும்.

இந்த நிகழ்ச்சித்திட்டம் ராவணாகந்த கிராமத்தில் உள்ள தோரவெல்கந்த கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று (18) இடம்பெற்றது. நுவரெலியா மாவட்டத்தின் எல்லையில் உள்ள இரத்தினபுரி மாவட்டத்தின் ஒரு முனையில், பலாங்கொட இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவில் ராவணாகந்த கிராமம் உள்ளது.

ராவணகந்த கிராமத்திற்கு அருகிலுள்ள கட்டடிகந்த, கல்லெனகந்த மற்றும் தோரவெல்கந்த உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தோரவெல்கந்த பாடசாலைக்குச் சென்று ஜனாதிபதியைச் சந்தித்து தங்கள் குறைகளைத் தெரிவித்தனர்.

பலாங்கொடை, ஹட்டன் வீதிக்கு உள்வரும் புதுக்காடு சந்தி முதல் 6 கி.மீ. தூரம் கொண்ட வல்கொட வீதி,ராவணாகந்த முதல் கல்லென்கந்த வீதி, தோரவெல்கந்த - வதுகரகந்த வீதி மற்றும் எகொடவலேபொட - வதுகரகந்த வீதி ஆகிய வீதிகள் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லும் வீதிகளை அடையாளம் கண்டு உடனடியாக அபிவிருத்தி செய்யுமாறு வீதி அபிவிருத்தி அமைச்சு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இந்த வீதிகளில் சந்திக்கும் ஊராஒய மற்றும் இமோஓய ஊடாக பாலங்களை நிர்மாணிப்பதும் இத்திட்டத்துடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படும். வீதி நிர்மாணத்துடன், பல சிறு தேயிலை தோட்ட கைத்தொழிலாளர்களுக்கு தேயிலை கொழுந்தினை கொண்டு செல்ல இது உதவும். கித்துல் உற்பத்தி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து மக்கள் ஜனாதிபதிக்கு விளக்கினர். கித்துல் உற்பத்தியினை தடையின்றி தொடர அனுமதிக்குமாறு பொலிஸ், வன பாதுகாப்பு மற்றும் வனசீவராசிகள் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

கித்துல் உற்பத்தி மற்றும் தேயிலை கொழுந்துகளை பறித்தல் உள்ளிட்ட அன்றாட வாழ்வாதாரங்களுக்காக வன மற்றும் வனசீவராசிகள் சரணாலயங்களுக்குள் செல்லும் கிராம மக்கள் மீது தன்னிச்சையாக வழக்குத் தொடர்வதை நிறுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார். அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று பல சந்தர்ப்பங்களில் தெளிவாகியிருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , இந்த நடவடிக்கைகளுக்கு உதவுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இப்பகுதியில் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு பற்றாக்குறையாக இருக்கும் தேயிலை பதப்படுத்தும் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். தேயிலை கொழுந்துகளை கொண்டு செல்வதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கு வசதிகளை வழங்க தலையிட மாகாண அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

நீண்ட காலமாக இப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகளை கண்டறிந்து உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கரகஸ்தலாவ வித்யாலயம், சுமன வித்யாலயம், பலங்கொட கனகநாயகம் தமிழ் வித்யாலயம், வலேபொட தமிழ் வித்யாலயம், உடகம வித்யாலயம், பின்னவல தமிழ் மகா வித்யாலயம், பலங்கொட புத்த ஜயன்தி வித்தியாலயம், தோரவெல்கந்த வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கும் உடனடி தீர்வுகளை வழங்க முடிவுசெய்யப்பட்டது. சபரகமுவ மாகாணத்தில் உயர்தர விஞ்ஞாம், கணிதம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை போதிக்கும் தமிழ் ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உடனடி திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இப்பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது. பின்னவல கிராமிய மருத்துவமனை, மனதுங்ககந்த உள்ளிட்ட பல கிராமப்புற மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், தாதிகள் பற்றாக்குறையை தீர்க்கவும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்கவும் பணிப்புரை வழங்கப்பட்டது.

பாங்கியாவத்த குப்பை அகற்றும் நிலையத்தினால் அப்பகுதியில் உள்ள மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பொருத்தமான திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவில் பாரிய குறைபாடாக உள்ள மயானம் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான காணியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு, அதை உள்ளூராட்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

தோரவெல்கந்த கல்லூரிக்கு ஜனாதிபதி அவர்களின் வருகையை நினைவுகூரும் வகையில், ஸ்ரீ லங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனத்தினால் இணைய வசதிகளுடன் கூடிய கணினி அமைப்புடன் "ஸ்மார்ட் வகுப்பறை" ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.

பலங்கொட ஆனந்த மைத்ரீ பாடசாலையில் 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் சதேவ் தினிருத் பெர்னாண்டோவின் “புத்தாக்கம்“ ஜனாதிபதி அவர்களினால் பாராட்டப்பட்டது. தமது உடல் வெப்பநிலையை தாமே பரீட்சித்து கிருமித் தொற்றகற்றலையும் அதன் மூலம் செய்யும் இரட்டை திறனை இந்த இயந்திரம் கொண்டுள்ளது. அது பொருத்தப்பட்டுள்ள இடத்தை கடந்து செல்லும்போது வெப்பநிலை சரிபார்க்கப்படாவிட்டால் இது ஒரு சமிக்ஞையை வெளியிடுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தோரவெல்கந்த வித்யாலயத்தின் 2 ஆம் ஆண்டு மாணவி ஓஷதி சமுதிகா ஜயவிக்ரம தான் எழுதிய இரண்டு புத்தகங்களை ஜனாதிபதியிடம் வழங்கினார்.