மகாபாரதப் போர் முடிந்து விட்டது. பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் தரப்பில் ஏராளமான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு விட்டன. கவுரவர்களைப் பெற்ற திருதராஷ்டிரர், மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்தார். ஏனெனில் அவரது 100 பிள்ளைகளும் அந்தப் போரில் இறந்து போயிருந்தனர். அவர் சோகத்தில் இருந்த போது, கிருஷ்ணரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் கிருஷ்ணரிடம், “கிருஷ்ணா.. நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல் கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படி இருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு கிருஷ்ணர், “உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன்” என்று கூறிவிட்டு கதையை சொல்லத் தொடங்கினார்.
“நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம், ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையாக சமைப்பது, மன்னனை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால், வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான். அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல், அந்தச் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு, அடிக்கடி சமைக்குமாறும் கட்டளையிட்டார். அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.
திருதராஷ்டிரா இப்போது சொல். அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்?” என்றார், கிருஷ்ண பகவான்.
“ஒரு முறை வசிஷ்டரின் சமையல்காரன், தான் அறியாமலேயே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டான். ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார். அந்த விவேகமும், எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே. சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும், அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்” என்று தனக்குத் தெரிந்த பதிலை அளித்தார் திருதராஷ்டிரர்.
புன்னகைத்த கண்ணன், “திருதராஷ்டிரா நீ ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய். அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய். அந்த அன்னக் குஞ்சுகளும், அதன் தாய்ப் பறவையும் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய். ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.
தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் கர்மவினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்” என்று கூறி முடித்தார், கிருஷ்ணன்.
நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம்.