ஈராக்கில் அமெரிக்க போர் விமானம் தரையிறங்கும் போது நிகழ்ந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் போர் விமானங்களில் ஒன்று, ‘சி 130 எச் ஹெர்குலிஸ்’. இந்த விமானம் நேற்று முன்தினம் இரவில் ஈராக் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள கேம்ப் தாஜி விமானப்படை தளத்தில் தரை இறங்க முயற்சித்தது.

அப்போது அந்த விமானம் சற்றும் எதிர்பாராத வகையில் ஓடுபாதையில் மேலெழுந்து, அங்கிருந்த சுவரில் மோதியது. இதனால் சிறிய அளவில் தீப்பிடித்தது. தகவல் அறிந்து, நான்கே நிமிடங்களில் அங்கு மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் படை வீரர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். எனினும் அவர்களது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. படுகாயம் அடைந்தவர்களில் 2 பேர் விமானிகள் ஆவர். விபத்துக்குள்ளான விமானத்தில் 23 பயணிகள் இருந்ததாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதில் எதிரிகளின் நாச வேலை பற்றிய சந்தேகம் எழ வில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவில் பாக்தாத் விமான நிலையம் மீது ஒரு ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாகவும் தெரிய வந்துள்ளது. எனினும் இதன் பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.