சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன

இந்த நிலையில் சமீபத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த திரைப்படம் திரையரங்குகள் திறந்தவுடன் அல்லது தீபாவளிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த திரைப்படம் சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ’சூரரைப்போற்று’ திரைப்படம் திரையிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திரையரங்குகள் இப்போதைக்கு திறக்கப்படாது என்றும் அப்படியே திறக்கப்பட்டாலும், பெரிய பட்ஜெட் படங்கள் திரையிட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளது பல்வேறு யூகங்களுக்கு இடம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது