திருச்சி கருமண்டபம் திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி காயத்ரி. இவர்களுக்கு தர்சன்(வயது 2) என்ற ஆண் மற்றும் 6 மாதத்தில் ஒரு கைக் குழந்தை. தீபாவளியை முன்னிட்டு காயத்ரி தனது 2 குழந்தைகளுடன் சோமரசம்பேட்டை அருகே இனியானூரில் உள்ள தனது தந்தை சண்முகம் வீட்டிற்கு சென்றிருந்தார். தீபாவளி முதல் நாள் அன்று காயத்ரி தன் மகனை குளிக்க வைத்து வாசலில் நிற்க வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பிறகு வெளியில் வந்து பார்த்தபோது தர்சனை காணாமல் பதற்றம் அடைந்தார். உடனே, காயத்ரி மற்றும் அவரது உறவினர்கள் தர்சனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. 

பின்னர், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முகம் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்தனர். அப்போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து சிறுவனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மேலே தூக்கி வந்தனர். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.