பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது என பிரித்தானியாவிடம் இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2000 ஆம் ஆண்டளவில் பிரித்தானியா, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இணைத்தது.

அதனைத் தொடர்ந்து யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவித வன்துறைகளும் இடம்பெறவில்லை. இதனால் குறித்த அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென ஏனைய சில நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

அதேபோன்று, பிரித்தானியாவின் விசாரணை ஆணையம் ஒன்றும் தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கவுள்ளதாக பல செய்திகள் அண்மையில் வெளியாகி இருந்தன.

இந்நிலையிலேயே  புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கக் கூடாதென இந்தியா, பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.