கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு என்பது நமது உடலில் இயற்கையாகவே காணப்படும் மெழுகு போன்ற ஒரு பொருளாகும்.
உடலின் சீரான செயல்பாட்டிற்கு தேவையான ஹார்மோன்கள், வைட்டமின் D உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொருட்களை உருவாக்குவதிலும், உணவை ஜீரணிக்க உதவுவதிலும் கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பொதுவாக கொலஸ்ட்ரால் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. HDL (நல்ல கொழுப்பு) உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது. அதேவேளையில், LDL (கெட்ட கொழுப்பு) அதிகரிக்கும்போது அது இரத்தக்குழாய்களின் சுவர்களில் படிந்து, இரத்த ஓட்டத்தைப் பாதிக்கக்கூடும்.
கொலஸ்ட்ரால் ஏன் ஆபத்தானது? கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான ஒன்றாக இருந்தாலும், அதன் அளவு அதிகரிப்பது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, LDL கொலஸ்ட்ரால் அதிகமாகும்போது இரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவுகள் உருவாகி, அவற்றைச் சுருக்கவோ அடைக்கவோ செய்யலாம்.

இதன் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பிற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். கொலஸ்ட்ரால் அதிகரித்தால் அறிகுறிகள் இருக்குமா? கொலஸ்ட்ரால் அதிகரிப்பது பல நேரங்களில் வெளிப்படையான அறிகுறிகளை ஏற்படுத்தாது.
அதனால், ஒருவருக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது தெரியாமலேயே இருக்கலாம். இதனால்தான் கொலஸ்ட்ராலை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், கொலஸ்ட்ரால் நீண்ட காலமாக அதிகமாக இருந்து இரத்தக்குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தும்போது, அதனுடன் தொடர்புடைய சில உடல்நலப் பிரச்சினைகள் வெளிப்படக்கூடும்.
அப்படி உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளாக தோன்றும் உடல் நல பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள்
1.நெஞ்சு வலி: கரோனரி தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவதால் இரத்த ஓட்டம் குறைந்து, உடற்பயிற்சி அல்லது மன அழுத்தத்தின் போது நெஞ்சு வலி ஏற்படலாம். பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு குமட்டல், சோர்வு போன்ற லேசான அறிகுறிகள் அடிக்கடி தோன்றும்.
2.கொழுப்பு கட்டிகள்: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது சருமத்தின் கீழ், குறிப்பாக முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகளில் கொழுப்பு கட்டிகள் தோன்றும். தீவிர நிலையில் பிட்டங்களில் கூட ஏற்படும்.

3.சுவாசிப்பதில் சிரமம்: இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் படிக்கட்டுகளில் ஏறுதல் அல்லது வேகமாக நடப்பது போன்ற சிறிய முயற்சிகளிலேயே மூச்சுத்திணறல் ஏற்படும்.
4.கால் வலி அல்லது தசைப்பிடிப்பு: கால்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால், சிறிது தூரம் நடந்தாலே கால் வலி, இறுக்கம் அல்லது தசைப்பிடிப்பு ஏற்ப்படும்.

5.தொடர்ச்சியான உடல் சோர்வு: இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் தசைகள் மற்றும் உறுப்புகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் தொடர்ந்து சோர்வு அல்லது பலவீனம் ஏற்படும்.
6.தலைவலி அல்லது மந்தத்தன்மை: கழுத்துத் தமனிகளில் கொழுப்பு படிவதால் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தலைவலி, தலைச்சுற்றல், கவனச் சிதறல் போன்றவை ஏற்படலாம். சில சமயங்களில் இது பக்கவாத அபாயத்தையும் அதிகரிக்கலாம். எனவே மேற்கண்ட அறிகுறிகளை அலட்சியம் செய்யாது உடனடி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
