பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பெரும்பாலானவர்கள் முட்டையை விரும்பி சாப்பிடுகின்றார்கள்.
இறைச்சி உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பவர்கள் கூட முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.காரணம் புரத்தின் மிகச்சிறந்த மூலமாக முட்டை அடையாளப்படுத்தப்படுவது தான்.
ஆனால் முட்டையையும் கூட தவிர்த்து சுத்த சைவமாக இருப்பவர்கள் மற்றும் வீகன் வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களால் முட்டையின் சுவையையும் அதன் ஆரோக்கிய பயன்களையும் பெற முடிவதில்லை.
அப்படிப்பட்டவர்களும் இனி முட்டையின் சுவையில் அதே ஆரோக்கிய பலன்களையும் அனுபவிக்கலாம்.அந்தவகையில், முட்டையே இல்லாமல் எப்படி ஆம்லெட் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டைக்கடலை (ஊறவைத்தது) – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு (நறுக்கியது)
கொத்தமல்லி இலைகள் – ஒரு கைப்பிடி (நறுக்கியது)
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ¼
மேசைக்கரண்டி மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை
முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை 5–6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தண்ணீரை வடித்துவிட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மாவை மாற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்க வேண்டும்.

அதன் பின்னர் சற்று கெட்டியான, ஊற்றக்கூடிய மாவு பதத்திற்கு நன்றாகக் கலந்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு தோசைக்கல்லை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவை ஊற்ற வேண்டும்.
சிறிய தோசை போல மென்மையாகப் பரப்பி, மிதமான தீயில் வேக வைத்து, பொன்னிறமானதும் ஒருமுறை திருப்பிப் போட்டு, மறுபக்கத்தையும் வேக வைத்து எடுத்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் வெஜ் ஆம்லெட் தயார்.
