இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4 கட்டங்களாக நீடிக்கப்பட்ட நிலையில் நாளை 31ந் திகதியுடன் அந்த உத்தரவு காலவதியாகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் பரவுதலும் தொடர்ந்த வண்ணமே உள்ளநிலையில், ஊரடங்கினை மேலும் இரு வாரங்களுக்கு நீடிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது எனத் தெரிய வருகிறது.

இது தொடர்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த உரையாடலின் போது, மாநில முதல்வர்கள் தெரிவித்த கருத்துகளை பிரதமரிடம் விளக்கி கூறி, அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது ? என்னென்ன கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது குறித்து அவர்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் அறியவருகிறது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சென்னையில், 1,400 படுக்கைகளுடன் புதிய கொரோனா மருத்துவ வார்ட் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த வார்ட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.